முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் மற்றும் அவரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையைத் தடுக்கும் உத்தரவை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் தொடர்பில் அரசாங்கம் விளக்கம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை என தெரிவித்துள்ளார்.
எந்த நபர் கைது செய்யப்படுவார் அல்லது இல்லையா என்பது நடைபெற்று வரும் விசாரணைகளின் முடிவுகள் மற்றும் வெளிப்படும் சான்றுகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னெடுத்து வரும் விசாரணைகளின் அடிப்படையிலேயே அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும், இது அமைச்சரவையில் அரசியல் ரீதியாக தீர்மானிக்கப்படும் விடயம் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
விசாரணைகள் முன்னேறும் விதத்தைப் பொருத்து தகவல்கள் வெளிவருவதால் சிலர் அச்சத்தில் இருக்கக்கூடும் எனவும், ஆனால் இறுதி முடிவுகள் ஆதாரங்களின் அடிப்படையிலேயே எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், சமூக ஊடகங்களில் பரவி வரும் கைது தொடர்பான தகவல்களுக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை எனவும் அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் சிரிப்புடன் கூறுகையில், “சில நேரங்களில் திருடனுக்கு முன்னரே வாழைக்குலை மதில் பாய்ந்த கதையாக இது இருக்கலாம், யாருக்குத் தெரியும்?” என்றும் தெரிவித்தார்.







