மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவை மற்றும் அனுசரணையாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “ஒளவை விழா” எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் கோலாகலமாக நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான ஊடக சந்திப்பு கல்லடி கிறீன்கார்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் விழாவின் நோக்கங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்கள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

கல்லடிப் பாலத்திற்கு அருகிலுள்ள அவ்வை சிலை முற்றத்தில் பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த விழா, தமிழ் இலக்கியம், கலாசாரம் மற்றும் சமூக விழுமியங்களை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் விவாதப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதுடன், அரசு ஊழியர்கள் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெற்றி பெறும் அணிகளுக்கு விருதுகளும் பணப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
மேலும், தேசிய ரீதியில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டிக்கு இலங்கையின் பல பகுதிகளிலிருந்து 131 கவிதைகள் கிடைத்துள்ளதாகவும், தேர்வு செய்யப்பட்ட படைப்பாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஒளவையாரின் சிந்தனைகள், பண்பாட்டு பங்களிப்புகள் மற்றும் சமூகத்திற்கு அவர் வழங்கிய விழுமியங்களை நினைவூட்டும் வகையில் இந்த விழா நடத்தப்படுவதாகவும், இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் அறிஞர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.








