கிழக்கின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப் பிரிவினரால் விசேட உணவுப் பாதுகாப்பு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் ஆலய வளாகத்தில் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பப்பாளி, மாம்பழம், யானைக் கொய்யா மற்றும் வாழைப்பழம் உள்ளிட்ட சுமார் 50 கிலோகிராம் பழுதடைந்த பழங்கள் கண்டறியப்பட்டன.
கண்டுபிடிக்கப்பட்ட பழங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதுடன், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலய உற்சவம் நிறைவடையும் வரை உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.








