2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் ஓகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே, அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டு அரச பல்கலைக்கழகங்களுக்கு மொத்தம் 92,043 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரச பல்கலைக்கழகங்களில் மாணவர் அனுமதிக்காக 42,937 மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தெரிவு செய்யப்படும் மாணவர்களின் சேர்க்கை நடவடிக்கைகள் ஓகஸ்ட் மாதத்தின் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வாரங்களில் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பொறுத்து செப்டெம்பர் மாத ஆரம்ப வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.








