எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை முழுமையாக நிறைவு செய்வதற்கும், பரீட்சைக்குத் தயாராகுவதற்கும் போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டுகளில் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை முடிக்க 27 முதல் 31 மாதங்கள் வரை கால அவகாசம் கிடைத்திருந்த நிலையில், இம்முறை வெறும் 21 மாதங்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், நாட்டின் பல பாடசாலைகளில் இன்னும் பாடத்திட்டங்கள் முழுமையாக நிறைவுபெறவில்லை எனவும் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்களைப் பயிற்சி செய்யவும், சுய கற்றலில் ஈடுபடவும் போதிய நேரம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் பல மாணவர்கள் தங்களின் பாடக்குறிப்புகள் மற்றும் கல்வி வளங்களை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உயர்தரப் பரீட்சை திகதியை மீளாய்வு செய்து, அதனை ஒத்திவைப்பதற்கான நடவடிக்கையை கல்வி அமைச்சு பரிசீலிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.








