முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகனும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதுடன், வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த மேலதிக நீதவான் லஹிரு சில்வா இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய ரோயல் கடற்படை அகாடமியுடன் தொடர்புடைய விசாரணை ஒன்றின் அடிப்படையில் வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, யோஷித ராஜபக்ஷ இன்று (17) முன்னதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








