பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் இருவர், பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (16) அல்லைப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 5.2 கிராம் மற்றும் 5 கிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 45 மற்றும் 49 வயதுடைய அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் ஊர்காவற்றுறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பொலிஸாரின் தகவலின்படி, குறித்த இருவரும் மாடு திருட்டு, களவு மற்றும் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக தகவல்கள் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, அல்லைப்பிட்டி சந்தி மற்றும் தேவாலயப் பகுதிகளில் இரு சந்தேகநபர்களும் தனித்தனியாக கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், தீவகப் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள பொலிஸார், அதுபோன்ற செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை அச்சமின்றி வழங்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.








