நுவரெலியாவில் தனியார் விடுதியில் தங்கியிருந்த 33 வயதுடைய பெண் மருத்துவர் ஒருவர் கண்டி – தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வெலிகம பகுதியைச் சேர்ந்த பி.ஆர். ஷ்யாமா தர்ஷனி என்ற மருத்துவர், தனது காதலரான கன்னொருவ பகுதியைச் சேர்ந்த டி.எம்.எஸ். தினெத் திசநாயக்கவுடன் கடந்த ஜூன் 3ஆம் திகதி நுவரெலியாவிற்கு வந்து தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் கடந்த 16ஆம் திகதி இரவு விடுதியில் இருந்து காரில் ஏற்றிச் செல்லப்பட்டதாக சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. இதையடுத்து அவரது மூத்த சகோதரர் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறைத் தொடர்ந்து பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஆண் நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸாரும் தடயவியல் பிரிவினரும் இணைந்து சிசிடிவி காட்சிகள், சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புத் தரவுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







