அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஒப்பந்தம், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மீண்டும் சீரான கப்பல் போக்குவரத்துக்கு வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்பை உலக சந்தைகளில் ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கமாக கச்சா எண்ணெய் விலைகள் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளன.
இந்த ஆண்டின் மிக நீண்ட சரிவு தொடரை பதிவு செய்துள்ள பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, கடந்த நான்கு நாட்களில் சுமார் 15 சதவீதம் குறைந்து ஒரு பேரலுக்கு 80 அமெரிக்க டொலருக்கும் கீழ் சென்றுள்ளது. அதேவேளை, வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 77 டொலரை அண்மித்துள்ளது.
வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான பதற்றம் தணிவடைந்து, மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் முன்னேறுகின்றன என்ற நம்பிக்கை, உலக எரிசக்தி சந்தைகளில் நிலவிய அச்சத்தை குறைத்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒப்பந்தத்தின் நீடித்த தன்மை மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக முழுமையான கப்பல் போக்குவரத்து மீளத் தொடங்கும் காலக்கெடு குறித்து உற்பத்தியாளர்கள், கப்பல் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள் கவனமாக மதிப்பீடு செய்து வருகின்றனர்.
பாரசீக வளைகுடாவையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கும் ஹார்முஸ் ஜலசந்தி, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்காற்றும் நீர்வழிப்பாதையாகும். அமைதியான காலங்களில் உலக எண்ணெய் விநியோகத்தின் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்தப் பாதை வழியாகவே கடத்தப்பட்டு வந்துள்ளது.
மேலும், ஈரானிய கச்சா எண்ணெய், பெட்ரோலிய இரசாயனப் பொருட்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய வங்கி, காப்பீடு, போக்குவரத்து சேவைகளுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வு வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கச்சா எண்ணெய் விலைகளின் சரிவு, உலகளவில் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கும் பணவீக்க அழுத்தங்களை தணிப்பதற்கும் உதவியுள்ளது. அமெரிக்காவில் மே மாதத்தில் ஒரு கெலன் பெட்ரோலின் சராசரி விலை 4.56 டொலரை கடந்திருந்த நிலையில், தற்போது அது மீண்டும் 4 டொலரை நோக்கி குறைந்துவருகிறது.








