கிழக்கு மாகாண பொதுச் சேவை நிர்வாகத்தின் பலவீனம் காரணமாக முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையின் விசேட தரத்துக்கான போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்ற உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (17) கருத்து தெரிவித்த அவர், கடந்த வாரம் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின் போது சில உத்தியோகத்தர்களின் முடிவுகள் தடைதாண்டல் பரீட்சைப் பெறுபேறு சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் இடைநிறுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையின் ஆட்சேர்ப்புத் திட்டத்தின்படி வருடத்திற்கு இருமுறை தடைதாண்டல் பரீட்சை நடத்தப்பட வேண்டும் எனவும், ஆனால் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு அந்த பரீட்சையை உரிய காலத்தில் நடத்தத் தவறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், பரீட்சை நடத்தப்படாத நிலையிலேயே அதன் பெறுபேறுகளை கோருவது முரண்பாடான நடவடிக்கை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலைமை காரணமாக பாதிக்கப்படுவது உயரதிகாரிகள் அல்ல, கீழ்மட்ட உத்தியோகத்தர்களே எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கிழக்கு மாகாண நிர்வாகம் தற்போதைய காலத்தில் கடுமையாக பலவீனமடைந்துள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் தங்களது நிர்வாக நடவடிக்கைகளை காலத்துக்கு ஏற்ப நிறைவேற்ற முடியாமல் சிரமப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த நிலைமை, அரசாங்கம் வாக்குறுதியளித்த “சிஸ்டம் சேஞ்ச்” என்பதற்கு எதிரானதாகும் எனவும், மாகாண நிர்வாகம் திறமையற்ற முறையில் செயல்படுவதை இது வெளிப்படுத்துவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் மேலும் தெரிவித்தார்.








