யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் இதுவரை சுமார் 380 மனித உடல்களுக்குச் சொந்தமான எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், இது இலங்கையில் இதுவரை பதிவான மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது.
கடந்த 2025 மே 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள், 2026 ஜூன் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மூன்று கட்டங்களாக 81 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 362 எலும்புக்கூடுகள் முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக அகழ்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அண்மையில் ஐ.நா. சித்திரவதைக்கு எதிரான குழு (UN CAT) இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ கண்காணிப்பு விஜயத்தின் பின்னணியிலேயே, மேலும் 14 மனித எலும்பு எச்சங்கள் புதிதாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதைகுழியில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்குச் சொந்தமான எச்சங்கள் உட்பட பல்வேறு வயதினரின் உடல்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், பால் போத்தல்கள், பொம்மைகள், பாடசாலை பைகள், காலணிகள் மற்றும் நாணயங்கள் உள்ளிட்ட சுமார் 120 தனிப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவின் கீழ், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள 17 மனிதப் புதைகுழிகளில் செம்மணி புதைகுழியே தற்போது முதலிடத்தில் உள்ளதாகவும், இதற்கு அடுத்ததாக மன்னார் சத்தொச புதைகுழி 376 உடல்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த அனைத்து மனிதப் புதைகுழிகளும் அரசாங்கத்தின் திட்டமிட்ட விசாரணைகளின் மூலம் அல்லாது தற்செயலாகவே கண்டறியப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.








