“தற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ், இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை இன்று (18) காலை ஆரம்பித்தார்.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இருந்து காலை 7.30 மணியளவில் ஆரம்பமான இப்பயணத்தை, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்ற விழிப்புணர்வு சைக்கிள் ஓட்ட வீரர், இதுவரை 63,421 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை மிதிவண்டியில் பயணித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு சைக்கிள் பயணங்களை மேற்கொண்டுள்ள அவர், தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பித்துள்ள இந்தப் பயணத்தை “தற்கொலை இல்லாத சமூகம்” என்ற இலக்கை முன்னிறுத்தி மேற்கொண்டு வருகின்றார்.
இந்த விழிப்புணர்வு பயணத்தின் முக்கிய நோக்கங்களாக மனநல விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தற்கொலை தடுப்பு, மனிதநேயம் மற்றும் கருணையை ஊக்குவித்தல், நம்பிக்கையையும் மனநல நலனையும் வலுப்படுத்துதல், உலக அமைதியை வலியுறுத்துதல் என்பன குறிப்பிடப்படுகின்றன.
அவரது இந்தப் பயணத்தின் பிரதான செய்தியாக, “ஒவ்வொரு வாழ்க்கையும் மதிப்புமிக்கது. நீங்கள் தனியாக இல்லை. நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்.” என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.








