அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று (19) சுவிட்சர்லாந்தின் பேர்கன்ஸ்டாக் நகரில் நடைபெறவுள்ளதாக சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்திடப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதே இந்தப் பேச்சுவார்த்தையின் பிரதான நோக்கமாகும்.
இந்தச் சந்திப்பில் இரு நாடுகளின் பிரதிநிதிகளுடன், மத்தியஸ்த நாடுகளாக கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பேச்சுவார்த்தையின் கால அட்டவணை மற்றும் விவாதிக்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வந்த பதற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் ஜனாதிபதி ஆகியோருக்கிடையில் அண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








