யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போன நிலையில், அவரது சடலம் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவல்களின்படி, குறித்த மீனவர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவிலிருந்து மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு சென்றிருந்தபோது காணாமல் போயிருந்தார்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன், தேடுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இன்று அவரது சடலம் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையோரத்தில் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இந்திய அதிகாரிகள் மேற்கொண்டு வருவதுடன், சட்ட நடவடிக்கைகளின் பின்னர் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








