ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சேலாகே குணரத்னவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல உத்தரவிட்ட கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதித்து உத்தரவிட்டார்.
சந்தேகநபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை சமர்ப்பிக்கையில், கொள்முதல் செயல்முறைக்கு புறம்பாக ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்திற்கு பொதியிடல் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 14,300,000 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, இந்த சந்தேகநபரை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இன்று காலை கைது செய்திருந்ததாகத் தெரிவித்தனர்.








