ரூபாய் 37 கோடியே 70 இலட்சம் பெறுமதியான ஹசீஸ் (Hashish) போதைப்பொருள் தொகையுடன் வெளிநாட்டு நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (19) நள்ளிரவு, பணம் செலுத்தி பயன்படுத்தக்கூடிய “கோல்ட் ரூட்” (Gold Route) சிறப்பு பயணிகள் சேவையின் ஊடாக நாட்டிற்குள் நுழைய முயன்றபோது இந்த கைது இடம்பெற்றதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கனடாவிலிருந்து டுபாய் வழியாக எமிரேட்ஸ் விமான சேவையின் EK-648 விமானத்தில் நேற்று இரவு 11.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.
சந்தேகநபர் கொண்டு வந்த இரண்டு பயணப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 146 பொதிகளில் மொத்தமாக 37 கிலோகிராம் 639 கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலைய வரலாற்றில் இவ்வளவு அதிக மதிப்புடைய ஹசீஸ் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 206 அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்தி “கோல்ட் ரூட்” சேவையைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்த முயற்சிக்கப்பட்ட முதல் நிகழ்வாகவும் இது பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








