கொழும்பில் உள்ள தனியார் வங்கியொன்றின் சட்டப் பிரிவில் பணியாற்றும் பெண் சட்டத்தரணி ஒருவர், இரத்மலானை பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இருந்து பொருட்களைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை காவல்துறை தலைமையகத்தின் தகவலின்படி, சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண், வாடிக்கையாளராக கடைக்குள் நுழைந்து பொருட்களை வாங்குவது போன்று நடந்து கொண்டு, சில பொருட்களை ரகசியமாக தனது கைப்பையில் வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை அங்காடியின் கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அங்காடி நிர்வாகத்தினரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், பெண் கடையை விட்டு வெளியேறிய பின்னர் அவரைச் சோதனைக்கு உட்படுத்தினர்.
சோதனையின் போது, 520 கிராம் கோழி இறைச்சி, 250 கிராம் ஆட்டு இறைச்சி, வறுத்த முந்திரி, பல் துலக்கும் தூரிகை மற்றும் ரூ.5,290 மதிப்புடைய மதிய உணவுப் பொட்டலம் உள்ளிட்ட பொருட்கள் அவரது கைப்பையில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த பெண் இதற்கு முன்னர் கடந்த 17 ஆம் திகதியும் அதே அங்காடியில் இருந்து மீன்களை இதேபோன்ற முறையில் எடுத்துச் சென்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.








