டீசல் விலை குறைக்கப்பட்டாலும் எதிர்வரும் 6 மாதங்களுக்கு பஸ் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தை எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி முன்னெடுப்பது தொடர்பில் ஆலோசிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலை சூத்திரம் மாத இறுதியில் முன்னெடுப்பதால் அதன் அடிப்படையிலேயே பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
எனினும் ஜூலை மாதத்தில் பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டால் அதன் பின்னரோ அல்லது அதற்கு முன்னரோ டீசல் விலை குறைக்கப்படுமாயினும் 6 மாதங்கள் வரை எவ்வித கட்டண திருத்தத்தையும் மேற்கொள்ளப் போவதில்லை.
ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் இறுதி வரையான காலப்பகுதி வரையில் தனியார் பஸ் போக்குவரத்துத்துறை நாளொன்றுக்கு 25 ரூபாய் வீதம் 60 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் செய்துக் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் டீசல் விலை குறையுமானால் பஸ் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என எவ்வித உள்ளடக்கமும் இல்லை.
இதுவரை புரிந்துணர்வின் அடிப்படையிலேயே அதனை நாம் செய்து வந்தோம்.
இனி அவ்வாறு செய்யப் போவதில்லை. அது குறித்து எம்மீது வழக்கு தொடுக்கவும் முடியும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.








