நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2,112 குடும்பங்களைச் சேர்ந்த 8,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கூன் தெரிவித்துள்ளார்.
நேற்று (06) பிற்பகல் வரையான நிலவரப்படி, ஏற்பட்ட அனர்த்தங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, 152 குடும்பங்களைச் சேர்ந்த 504 பேர் 18 தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் பலத்த காற்றினால் மாவட்டத்தில் 11 வீடுகள் முழுமையாகவும், 246 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. மவுசாக்கலை நீர்த்தேக்கம் கொள்ளளவை எட்டியுள்ளதுடன், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது.
மேலும், கென்யோன், புரொட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர மற்றும் மேல் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி, மதகுகள் ஊடாக வெளியேறி வருகின்றது.
இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படும் பட்சத்தில் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








