மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி, உடல்நலக்குறைவு காரணமாக தனது 61ஆவது வயதில் இன்று (21) காலமானார்.
கடந்த இரண்டு வாரங்களாக சுகவீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பிற்பகல் உயிரிழந்ததாக குடும்பத்தினரும் நெருங்கிய வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
அரசியல், ஊடகம் மற்றும் சமூக சேவைத் துறைகளில் நீண்டகாலமாக செயற்பட்டு வந்த ஜெயானந்தமூர்த்தி, மட்டக்களப்பு மக்களின் பிரச்சினைகள் மற்றும் உரிமைகள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்த அரசியல் பிரமுகராக அறியப்பட்டார். அவரது மறைவு அரசியல் வட்டாரங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்த அவர், தனது தொழில் வாழ்க்கையை ஆசிரியராக ஆரம்பித்ததுடன் பின்னர் ஊடகத் துறையிலும் பணியாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 44,457 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.
அந்தத் தேர்தலில் வடகிழக்கிலிருந்து தெரிவான 22 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகவும் அவர் இடம்பிடித்திருந்தார்.
ஜெயானந்தமூர்த்தியின் மறைவு, மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் தமிழ் அரசியல் அரங்கிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகப் பார்க்கப்படுகிறது.








