கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் வைத்தியரின் மரணம் தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் காதலன் எனக் கூறப்படும் குறித்த நபர், தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் கண்டி பகுதியில் உள்ள வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் ஒளிந்திருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் சுமார் 10 இடங்களில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், அவர் தொடர்பான எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சந்தேகநபரின் தாயாரும் சகோதரரும் வசிக்கும் நாரம்மல பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்ற பொலிஸார், அவர்களிடமிருந்து வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபரின் மூத்த சகோதரர், தனது தம்பி சிறுவயது முதல் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு பலரை ஏமாற்றி பணம் மற்றும் பொருட்களை பெற்றுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
“அவர் எனது தம்பி என்றாலும், அவரது முகத்தைக் கூட பார்க்க விரும்பவில்லை. பல மோசமான செயல்களில் ஈடுபட்ட வெறுக்கத்தக்க நபர்” என சகோதரர் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சந்தேகநபர் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு தலைமறைவாக இருக்கக்கூடும் என நம்பப்படும் நிலையில், அவரைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு புலனாய்வு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.








