கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் தீர்த்த உற்சவம் இன்று (23) பக்தி பூர்வமாக நடைபெற்றது.
உற்சவத்தின் இறுதி நிகழ்வாக இடம்பெற்ற தீர்த்த உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பாசிக்குடா வங்கக் கடற்கரையை நோக்கிச் சென்றனர்.
இதனை முன்னிட்டு வசந்த மண்டப பூசை மற்றும் மஞ்சள் பூசை உள்ளிட்ட சமய நிகழ்வுகள் நடைபெற்றதுடன், கடற்கரையில் விசேட அபிஷேக மற்றும் ஆராதனை பூஜைகளும் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

கடந்த 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவத்தில், மாம்பழத் திருவிழா, வேட்டைத் திருவிழா மற்றும் தேர்த் திருவிழா உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.
அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற தீர்த்த உற்சவத்துடன் இவ்வாண்டிற்கான ஆனி உத்தர மஹோற்சவம் நிறைவடைந்தது.
மஹோற்சவ கால பிரதம குருவாக ஆகமபிரவீணர், பிரதிஷ்டா சாகரம் வாமதேவ சிவாச்சாரியார் தலைமையில் உற்சவ பூஜைகள் நடைபெற்றதுடன், சிவஸ்ரீ சபா பாஸ்கரக் குருக்கள் உள்ளிட்ட குருமார்களும் இதில் பங்கேற்றனர்.
வரலாற்றுப் பெருமை மிக்க வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயம், கிழக்கிலங்கையின் முக்கிய இந்து ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆலயத்தின் மூல விக்கிரகம் கைலாய மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதக் கற்களால் உருவாக்கப்பட்டதாக பக்தர்கள் நம்புகின்றனர்.















