கடந்த ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பாரியளவிலான எரிபொருள் கொள்வனவு தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், உலக சந்தையில் எண்ணெய் விலைகள் குறைந்துள்ள நிலையிலும் உள்நாட்டு எரிபொருள் விலைகள் குறைக்கப்படாதமை குறித்து கேள்வி எழுப்பினார்.
மேலும், தற்போதைய எரிபொருள் விலை நிர்ணயத்தின் அடிப்படை என்ன என்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து உலக எண்ணெய் விலைகள் உயர்வதற்கு முன்பே உள்நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
விலை நிர்ணய சூத்திரம் இருப்பதாக அரசாங்கம் கூறினாலும், அது நடைமுறையில் பின்பற்றப்பட்டதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட விலை நிர்ணய சூத்திரம் பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தத் தகவல்கள் வெளியிடப்படாதது ஏன் என்பதையும் அவர் கேள்வி எழுப்பினார்.
அரசாங்கம் உண்மையில் எந்த அடிப்படையில் விலைகளை நிர்ணயிக்கிறது என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விலை நிர்ணய சூத்திரத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.
மேலும், தேவைக்கு அதிகமாக எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்தார்.
தேவையற்ற அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் கொள்வனவு செய்யப்பட்டிருந்தால், அதற்கான காரணங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.








