தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட ஆபரணங்களை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23.06.2026) தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களிடமிருந்து இராணுவத்தால் எந்தவொரு ஆபரணங்களும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்தார்.
எனினும், முன்னாள் விடுதலைப்புலிகள் முகாம்களில் இருந்து சுமார் 150 கிலோகிராம் அளவிலான தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்த ஆபரணங்கள் தற்போது இராணுவக் கட்டுப்பாட்டில் இல்லாமல், நீதிமன்றத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நீதிமன்றம், குற்றப்புலனாய்வு திணைக்களம், இலங்கை மத்திய வங்கி மற்றும் தங்க ஆபரண அதிகார சபை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் உரிமையாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2014 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 2,015 பேருக்கு 2015 ஆம் ஆண்டில் ஆபரணங்கள் மீள வழங்கப்பட்டதாகவும், எஞ்சிய ஆபரணங்கள் சட்டரீதியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உரிமையாளர்களின் முழுமையான தகவல்கள் இல்லாத காரணத்தால், நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் மீதமுள்ள ஆபரணங்களை வழங்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
அத்துடன், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்த ஒப்படைப்பு நடவடிக்கைகளை முழுமையாக நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.








