எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, நாட்டில் பாதுகாப்பான நெல் இருப்பை பராமரிப்பது மிகவும் அவசியமானது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இது ஒரு வழக்கமான நிர்வாக நடவடிக்கையாக மட்டும் பார்க்கப்படாமல், விசேட கவனத்திற்குரிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுபோக நெல் கொள்வனவுத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிய அவர், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
கடந்த ஆண்டின் சிறுபோகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் இருப்புகள் இதுவரை போதுமான அளவில் சந்தைக்கு விநியோகிக்கப்படாதிருப்பது ஒரு சிக்கலான நிலைமை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, களஞ்சியசாலைகளை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கோரினார்.
மேலும், இவ்வாண்டு சிறுபோக நெல் கொள்வனவுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உறுதிப்படுத்துமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
மாவட்ட மட்டத்தில் உள்ள களஞ்சியசாலைகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
களஞ்சியசாலைகளின் கொள்ளளவு, நிலைமை மற்றும் பாதுகாப்பான நெல் இருப்புகள் குறித்த துல்லியமான தரவு அமைப்பை பராமரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்கான தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த தகவல்கள் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.








