போர்ச்சுகல் கால்பந்து அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகக் கால்பந்து வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
2026 பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குரூப் கே பிரிவுக்கான லீக் ஆட்டம் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்றது. இதில் உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொண்ட போர்ச்சுகல் அணிக்காக ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்திலேயே ரொனால்டோ கோல் அடித்து 1-0 என்ற முன்னிலையை பெற்றுக்கொடுத்தார்.
குறித்த கோல் விஏஆர் (VAR) தொழில்நுட்பத்தின் மூலம் சரிபார்க்கப்பட்ட பின்னர் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
இந்த கோலின் மூலம், ஆறு வெவ்வேறு உலகக் கிண்ணத் தொடர்களில் கோல் அடித்த உலகின் முதல் கால்பந்து வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை 41 வயதான ரொனால்டோ படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் 2006, 2010, 2014, 2018 மற்றும் 2022 ஆகிய உலகக் கிண்ணத் தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை அவர் ஏற்கனவே தக்கவைத்திருந்தார். தற்போது 2026 உலகக் கிண்ணத்திலும் கோல் கணக்கைத் தொடங்கியதன் மூலம், தனது இருபது ஆண்டுகால உலகக் கிண்ணப் பயணத்தில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.
முன்னதாக, கொங்கோ குடியரசு அணிக்கு எதிரான முதல் போட்டியில் போர்ச்சுகல் அணி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றிருந்ததால், இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய அவசியத்துடன் களமிறங்கியது.
அத்தகைய சூழ்நிலையில் போட்டியின் ஆரம்பத்திலேயே ரொனால்டோ அடித்த கோல், போர்ச்சுகல் அணிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.








