இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு வெள்ளாடுகள் மற்றும் புறாக்களை கடத்திச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சியை தமிழக பொலிஸார் முறியடித்துள்ளனர்.
திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரையில் பதிவு எண் இல்லாத இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட பைபர் படகில் சிலர் வெள்ளாடுகள் மற்றும் பெட்டிகளை ஏற்றிக்கொண்டிருந்த நிலையில், பொலிஸார் அப்பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது, கடத்தலில் ஈடுபட்டவர்கள் படகை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் படகை சோதனையிட்ட பொலிஸார், அதிலிருந்து 8 வெள்ளாடுகளையும், மூன்று பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த புறாக்களையும் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட வெள்ளாடுகள் மற்றும் புறாக்களின் மொத்த பெறுமதி இலங்கை நாணயப்படி சுமார் 20 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றை படகு மூலம் இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தூத்துக்குடியில் இருந்து மஞ்சள், ஏலக்காய், பூச்சிக்கொல்லி மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள், வாசனை சோப்புகள் மற்றும் ஷாம்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் இலங்கைக்கு கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் தமிழக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








