முன்னாள் புலனாய்வுத்துறைத் தலைவர் சுரேஷ் சலேவைச் சுற்றியுள்ள மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பில் தலையீடு செய்யுமாறு கோரி, அவரது தாயார் பாப்பரசர் லியோவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதம், இலங்கைக்கான திருத்தந்தையின் பிரதிநிதியான திருத் தூதரிடம் இன்று (23) கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் சுரேஷ் சலேவின் மனைவியும் கலந்து கொண்டிருந்தார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்த சுரேஷ் சலே, காவலில் இருந்தபோது உணவு உட்கொள்ள மறுத்ததாகவும், இதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பில் சர்வதேச மதத் தலைவரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.








