இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை, ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கான தரவுகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
அஸ்வெசும திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் நான்கு பிரிவுகளின் கீழ் சுமார் 16 இலட்சம் பயனாளிகள் உதவித்தொகை பெற்றிருந்தனர்.
எனினும், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இடைக்காலப் பிரிவில் இடம்பெற்றிருந்த 3 இலட்சத்து 15 ஆயிரம் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நலிவடைந்த மக்களாக வகைப்படுத்தப்பட்டிருந்த 4 இலட்சத்து 25 ஆயிரம் பயனாளிகளுக்கான நிவாரண உதவித்தொகையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த இரு பிரிவுகளிலும் உள்ள ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் மீளாய்வின் பின்னர் அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் உதவித்தொகையை மீண்டும் பெற முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் உதவி ஆணையாளர் அஷான் தர்ஷக தெரிவித்துள்ளார்.








