மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், நாளை (27) முதல் 29ஆம் திகதி வரை கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட்டுக்கு மேற்பட்ட சூரிய மின்சக்தி அமைப்புகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (26) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்தக் காலப்பகுதியில் குறித்த சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுத்தி வைப்பதன் மூலம் கடந்த வெசாக் தினத்தில் ஏற்பட்டதைப் போன்ற திடீர் மின்சாரத் தடைகளைத் தவிர்க்க முடியும் என்று தெரிவித்தார்.
மேலும், தேசிய மின்கட்டமைப்பின் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பிரதி அமைச்சர் விளக்கமளித்தார்.
எனவே, 300 கிலோவோட்டுக்கு அதிக திறன் கொண்ட கூரை சூரிய மின்சக்தி அமைப்புகளைப் பயன்படுத்தும் நுகர்வோர், ஜூன் 27 முதல் 29ஆம் திகதி வரை அவற்றின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.








