உயர் நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில், ஆசியா மற்றும் பசிபிக் சட்ட சங்கம் (LAWASIA) தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தத் திடீர் அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்தன்மையையும், அதன் மீதான மக்களின் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
தற்போதைய சூழலில் நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது, நீதித்துறையில் அரசியல் தலையீடாகப் பார்க்கப்படலாம் என இலங்கை சட்டத்தரிகள் சங்கம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பியிருந்த கடிதத்துக்கும் LAWASIA ஆதரவு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 107(5) ஆவது பிரிவின் கீழ் நீதிபதிகளின் ஓய்வு வயது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய பொதுக் கலந்தாலோசனைகள் இன்றி இவ்வாறான தற்காலிகத் திருத்தங்களை மேற்கொள்வது பொருத்தமற்றது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலப் பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பெய்ஜிங் கோட்பாடுகள்’ அறிக்கையையும் LAWASIA மேற்கோள் காட்டியுள்ளது.
அத்துடன், பொதுநலவாய வழக்கறிஞர்கள் சங்கத்தின் கவலைகளையும் எடுத்துரைத்துள்ள அந்த அமைப்பு, இந்தத் திருத்தத்தை உடனடியாக கைவிடுமாறும், அனைத்து தரப்பினருடனும் முறையான ஆலோசனைகளை நடத்தி சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.








