‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (26) கதிரவெளி விக்னேஷ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் கே. விமலாநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் நோக்கம், புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் தடையின்றி தொடர்வதை உறுதிப்படுத்துவதாகும்.
அதிதிகள் வரவேற்பு, தேசியக் கொடி ஏற்றுதல், தேசிய கீதம் இசைத்தல் மற்றும் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் கலந்து கொண்ட அதிதிகள் உரையாற்றியதுடன், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
வாகரைப் பிரதேசத்தில் ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட கதிரவெளி விக்னேஷ்வரா வித்தியாலயம், பால்சேனை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் வட்டவான் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வாகரை வலயத்தின் பிரதி கல்வி அபிவிருத்திப் பணிப்பாளர் என். நேசகஜேந்திரன், வாகரை பிரதேச செயலாளர் கே. அமலினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


















