அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில், பொலிஸாரின் கடமையில் இடையூறு விளைவித்து அவர்களின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் 44 வயதுடைய நபர் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
119 அவசர சேவைக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, சம்பவம் இடம்பெற்ற இரவு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, சந்தேகநபர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்தியதுடன், அவர்களிடம் இருந்த துப்பாக்கியையும் பறிக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மேலதிக பொலிஸார் துப்பாக்கியை மீட்டதுடன், காயமடைந்த பொலிஸார் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்திற்குப் பின்னர் தப்பிச் சென்ற சந்தேகநபர் பின்னர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார்.
ஆரம்ப விசாரணைகளின் போது, 2000ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்ததாகவும், 2004ஆம் ஆண்டு அமைப்பில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து அதிலிருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், சம்பவம் நடந்தபோது மதுபோதையில் இருந்த சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்து அதனை இயக்கும் முறையைப் பற்றிப் பேசியதுடன், “உங்களுக்கு யார் பயிற்சி தந்தார்கள்?” என ஏளனமாகக் கேட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்தேகநபர் தொடர்பில் பல்வேறு கோணங்களில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.








