கடுவளை, சுதர்ஷன மாவத்தையில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த இடமொன்றில், சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தமை பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் அம்பலமாகியுள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது இந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்ப விசாரணைகளில், வெளிப்படையாக குடிநீர் விற்பனை நிலையமாக இயங்கி வந்த அந்த இடத்தில் மறைமுகமாக மதுபான உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் போது, 180 மில்லிலிட்டர் கொள்ளளவு கொண்ட 18,575 சட்டவிரோத மதுபானப் போத்தல்கள் (மொத்தம் 3,345.5 லீட்டர்), ஒரு லீட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு போத்தல்கள், 750 மில்லிலிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு போத்தல், எத்தனோல் மற்றும் மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
அத்துடன், 50 கிராம் மற்றும் 200 மில்லிகிராம் அளவிலான கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 30, 43, 58, 59 மற்றும் 62 வயதுகளுக்கிடைப்பட்ட ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மிஹிந்தலை, மருதானை, வத்தளை, வேபொட தெற்கு, கெத்தலாவ மற்றும் சிப்பிகுளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் விற்பனை என்ற போர்வையில் தயாரிக்கப்பட்ட இந்த சட்டவிரோத மதுபானங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சட்டவிரோத வலையமைப்புடன் தொடர்புடைய மேலும் பலர் மற்றும் அதன் பின்னணியில் உள்ள நபர்களை கண்டறியும் விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








