முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சலே முன்னெடுத்த உண்ணாநோன்பு போராட்டம், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பவும் மேற்கொள்ளப்பட்ட போலி நாடகம் என ஜனபலய கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், சுரேஷ் சலேவின் உடல்நிலையை விசேட மருத்துவக் குழு பரிசோதித்தபோது, அவர் உண்மையில் உண்ணாநோன்பில் ஈடுபடவில்லை என்பது மருத்துவ ரீதியாக உறுதியானதாகத் தெரியவந்ததாகக் கூறினார். இதையடுத்து தனது உண்ணாநோன்பு போராட்டத்தை அவர் கைவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், விசாரணை அதிகாரிகளை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த போராட்டம் நடத்தப்பட்டதாகவும், விசாரணைக்கு தேவையான சான்றுகளை வழங்காமல் விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சியில் சுரேஷ் சலே ஈடுபட்டுள்ளதாகவும் விதர்ஷன கன்னங்கர குற்றம்சாட்டினார்.

அதேசமயம் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சலேவின் மடிக்கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி கடவுச்சொற்களை வழங்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தாம் மதிப்பதாகவும், ஆனால் அதனுடன் உடன்படவில்லை என்றும் பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், சந்தேக நபரை விசாரணைக்கு ஒத்துழைக்க வற்புறுத்த முடியாது என்பது உலகளாவிய சட்டக் கோட்பாடு எனவும் கூறினார்.
மேலும், கடவுச்சொற்களை வழங்க வேண்டாம் என்பதற்கு சட்ட உரிமைகள், விசாரணை அழுத்தங்கள், தகவல் வழங்குநர் பாதுகாப்பு மற்றும் வரலாற்று அனுபவங்கள் உள்ளிட்ட காரணங்கள் இருப்பதாகவும் அவர் விளக்கினார்.
இந்நிலையில், இந்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சுரேஷ் சலே தரப்பு சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்யலாம் என அவர் எதிர்பார்த்துள்ளார்.








