வவுனியா, மடுகந்தை – மயிலங்குளம் பகுதியில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட்டதுடன், வீட்டில் இருந்த 51 வயது பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, வீட்டின் வாகன சாரதி மீது வாளால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பெண்ணை கட்டுப்படுத்தி அவரிடமிருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள், 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், 5.7 இலட்சம் ரூபாய் பணம் உள்ளிட்ட பொருட்களுடன் காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்களும் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா பொலிஸார் முதற்கட்டமாக இருவரை கைது செய்ததுடன், பின்னர் மேலும் மூவரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகன ஆவணங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் மற்றும் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.







