நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சிறைச்சாலையில் உள்ள கைதிகளை ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையின் பாதுகாப்பு நிலையை கண்காணிக்கும் வகையில் இலங்கை விமானப்படையின் இரண்டு ட்ரோன் கருவிகளும், பெல் 412 ரக ஹெலிகொப்டரும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக மேலதிக இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், நேற்று (05) பிற்பகல் ஆரம்பமான கைதிகள் மோதல் இன்று (06) காலை மீண்டும் தீவிரமடைந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 5 சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலத்த காயமடைந்த 4 சிறை அதிகாரிகள் உட்பட 13 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்த பலரின் உடல்களில் துப்பாக்கிக் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று நள்ளிரவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த நிலைமை, இன்று காலை கைதிகளுக்கு உணவு வழங்கச் சென்றபோது மீண்டும் மோசமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது இரு கைதி குழுக்களும் மீண்டும் மோதிக்கொண்டதுடன், தலையிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கைதிகள் சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் வரை அதிகாரிகளை துரத்திச் சென்று தாக்கியதுடன், நுழைவாயிலை உடைத்து வெளியேறவும் முயற்சித்துள்ளனர். இதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், கைதிகள் ஆயுதங்களைக் கைப்பற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த துப்பாக்கிகள் நேற்று நள்ளிரவிலேயே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இந்த மோதலில் பல்வேறு குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய கைதிகள் ஈடுபட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். குறிப்பாக, ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ என அழைக்கப்படும் கைதி இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








