போர்த்துகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை (2026) தொடரே தனது கடைசி உலகக் கோப்பை என அறிவித்துள்ளார்.
ஸ்பெயினுக்கு எதிரான 16 அணிகள் சுற்றுப் போட்டிக்கு முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த 41 வயதான ரொனால்டோ, இது எனது கடைசி உலகக் கோப்பை. ஆனால் நாளைய போட்டி எனது கடைசி ஆட்டமாக இருக்காது என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து ஆறு தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ள ரொனால்டோ, 2030 ஆம் ஆண்டு போர்த்துகல், ஸ்பெயின் மற்றும் மொராக்கோ இணைந்து நடத்தவுள்ள உலகக் கோப்பையில் பங்கேற்க மாட்டேன் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை அவர் 3 கோல்களைப் பதிவு செய்துள்ளார். இதில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக 2 கோல்களும், குரோஷியாவுக்கு எதிரான நாக்-அவுட் சுற்றில் பெனால்டி மூலம் ஒரு கோலும் அடங்கும்.
ஓய்வு குறித்து கேட்கப்பட்டபோது, அந்த நாள் நிச்சயம் வரும். ஆனால் நாளை என்ன நடந்தாலும், நான் கால்பந்துக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன் என்ற மனநிறைவுடன் வெளியேறுவேன். நான் கால்பந்தை நேசிப்பதால் மட்டுமே இன்னும் விளையாடுகிறேன் என அவர் கூறினார்.
ஸ்பெயின் இளம் நட்சத்திரம் லாமின் யமால் குறித்து கருத்து தெரிவித்த ரொனால்டோ, அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. ஆனால் நான் எப்போதும் முழு ஸ்பெயின் அணியையே பார்க்கிறேன். நீண்ட காலம் விளையாட வேண்டும் என்றால் விமர்சனங்களை சரியாக கையாள கற்றுக்கொள்ள வேண்டும். ரசிகர்களின் அன்பும், விளையாட்டின் மீதான ஆர்வமும்தான் ஒரு வீரரை முன்னோக்கி அழைத்துச் செல்லும் என்று தெரிவித்தார்.








