நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் இந்திய பிரஜை ஒருவரும் உயிரிழந்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ். உன்னிகிருஷ்ணன் என்ற 73 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதிகாரப்பூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை என்றாலும், இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்திய தரப்பால் இது தொடர்பாக குறிப்பு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதை கொழும்பிலுள்ள தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்தியா டுடே மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 28 ஆக அதிகரித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த வன்முறைகளைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் பாதுகாப்புக் கருதி நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியக் கைதிகளும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.








