யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 694 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், டெங்கு காரணமாக எந்தவித உயிரிழப்பும் பதிவாகவில்லை என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டிலும் டெங்கு இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றார்.
எனினும், ஜூலை மாதத்தின் முதல் ஏழு நாட்களில் மட்டும் 65 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை திடீர் அதிகரிப்பாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மேல் மாகாணம், குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கு கல்வி மற்றும் தொழில் நிமித்தம் தங்கியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வரும்போது டெங்கு தொற்றுடன் வருவதாகவும், அவர்களில் பலர் யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தமது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதில் தொடர்ந்தும் ஒத்துழைக்குமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.








