ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, ஈரான் மீது மேலும் ஒரு கட்ட இராணுவத் தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரான் அரசு ஊடகங்களின் தகவலின்படி, அங்கீகரிக்கப்பட்ட கடல் பாதையில் இருந்து விலகிச் சென்றதுடன், கப்பலின் கண்காணிப்பு அமைப்புகளும் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததாகக் கூறி, இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அந்தக் கப்பலை குறிவைத்து நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாகவும் ஈரான் அறிவித்துள்ளது.
சைப்ரஸைச் சேர்ந்த வணிகக் கப்பல் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலைத் தொடர்ந்து, “இந்த வாரத்தின் மூன்றாவது சுற்று நடவடிக்கையை” மேற்கொண்டதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
தாக்குதலால் கப்பலின் இயந்திர அறை கடுமையாக சேதமடைந்ததால் அது தனது பயணத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கப்பலில் பணியாற்றிய ஒருவரை காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத், வணிகக் கப்பல்களுக்கு எதிரான முந்தைய தாக்குதல்களுக்கும் ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும், மீண்டும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தனது சமூக வலைதளப் பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்.
“ஈரான் தவறான முடிவை எடுத்துள்ளது. அதற்கான விளைவுகளை தற்போது எதிர்கொள்கிறது,” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்பு, சந்தேகத்திற்கிடமான வகையில் நகர்ந்த வணிகக் கப்பலுக்கு எச்சரிக்கை ஏவுகணை செலுத்தியதாகவும், பலமுறை எச்சரித்தும் ஒத்துழைக்காததால் கப்பலை தடுத்து நிறுத்தியதாகவும் ஈரான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்கும் கடுமையான பதிலடி வழங்கப்படும் என்றும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் இலக்காகக் கொள்ளப்படலாம் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.








