வவுனியாவில் ரூ.50,000 பெறுமதியான போலி நாணயத் தாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2011ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கின் மீள் விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்றது. வழக்கின் தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட நிலையில், முதல் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அமலவளன் ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, குற்றவாளிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன், ரூ.1 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மேலதிகமாக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டத்தரணி ஸ்ரீ சிவஸ்கந்தஸ்ரீ ஆஜராகி வழக்கை முன்னிலைப்படுத்தினார்.








