நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.5 இலட்சம் ஆரம்பகட்ட நிவாரணமாக மட்டுமே வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தத் தொகை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளித்த சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க, உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ.20 இலட்சத்திற்கும் அதிகமான நிவாரணத் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
மேலும், உயிரிழந்த அதிகாரிகளின் இறுதிக்கிரியைகள் அனைத்தும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் முழுச் செலவில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மோதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உரிய நட்டஈடு வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.








