கிழக்கு மாகாணத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம், குறிப்பாக சுற்றுலாத்துறையில் காணப்படும் முதலீட்டு மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகளை ஆராயும் நோக்கில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் குழுவொன்று இன்று மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்தது.
மியன்மார், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் மட்டக்களப்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
வருகை தந்த தூதுவர்கள் பாரம்பரிய மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள், அவற்றை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் மாநகர சபையின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு தேவையான ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை வழங்குமாறு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தூதுவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
நிகழ்வின் நிறைவில், ஐந்து நாடுகளின் தூதுவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டதுடன், ஒவ்வொரு நாட்டின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கக்கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவு அறிக்கைகளும் கையளிக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநகர சபை ஆணையாளர் என். தனஞ்செயன், மாநகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.































