நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70,000-ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஜூலை 13 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 69,951 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜூலை 12 ஆம் திகதி வரை இந்த எண்ணிக்கை 68,672 ஆக இருந்த நிலையில், ஜூலை 13 அன்று மட்டும் 1,279 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாகாண வாரியாகப் பார்க்கும்போது, அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். அங்கு மட்டும் 33,127 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியான தரவுகளின்படி, கம்பஹா மாவட்டத்தில் 14,464 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 14,004 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மேலும், ஜூலை மாதத்தின் முதல் 13 நாட்களிலேயே 14,572 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மாதாந்திர அடிப்படையில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளனர். அந்த மாதத்தில் மட்டும் 21,538 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.








