வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தில் நிலவும் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை இம்முறை வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் இணைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான முன்கூட்டிய கலந்துரையாடலிலும் பங்கேற்றபோதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்தக் கூட்டம் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நாட்டிற்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை விளங்குவதால், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்காக ஒழுங்குபடுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டமொன்றை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும், மாவட்ட மட்டத்தில் சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை விரைவாகவும் திறம்படவும் செயல்படுத்துவதற்காக, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளை மாவட்ட செயலாளர்களின் நிதி இருப்புகளுக்கு நேரடியாக வழங்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
இதன் மூலம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் சுற்றுலா ஒருங்கிணைப்புக் குழுக்களுடன் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, சிகிரியா, கலேவெல மற்றும் திருகோணமலை பகுதிகளை மையமாகக் கொண்டு முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவை இணைந்து ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.
அரச நிறுவனங்கள் தனித்தனியாக செயல்படுவதற்குப் பதிலாக ஒருங்கிணைந்த அணுகுமுறையில் செயற்படுவதன் மூலம் நேரத்தையும் வளங்களையும் பயனுள்ளதாக பயன்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.








