நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேவண்டன் தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதையை அவசரமாக புனரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் இன்று (17) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேவண்டன் தோட்டத்தில் சுமார் 48 குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த கடும் மழையினால் தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதை கடுமையாக சேதமடைந்ததால், அன்றாட போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
பாதை சேதமடைந்ததைத் தொடர்ந்து, தோட்டத்தில் இயங்கி வந்த பாடசாலையும் தற்போது செயல்படாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் அருகிலுள்ள பாடசாலைகளில் தங்கியிருந்து கல்வி கற்றதுடன், தற்போது மீண்டும் தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவாக சீரமைத்து வழங்குவதாக கொத்மலை பிரதேச செயலகம் உறுதியளித்திருந்த போதிலும், கடந்த ஒன்பது மாதங்களாக எந்தவித முன்னேற்றமும் இல்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையடுத்து, சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமான சேதமடைந்த பாதையை உடனடியாக புனரமைக்குமாறு வலியுறுத்தி, பதாகைகள் ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் வேவண்டன் தோட்டத்திலிருந்து கண்டி–நுவரெலியா பிரதான வீதியின் கெரண்டி எல்லை பகுதி வரை நடைபயணமாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட மக்களின் போக்குவரத்து, கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகள் வழமையான நிலைக்குத் திரும்பும் வகையில், பாதையை விரைவாக சீரமைத்து அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தருமாறு அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.








