கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இன்று (16) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர், கூட்டம் ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்றதாகவும், பின்னர் ஏற்பட்ட சம்பவம் காரணமாக அது இடைநிறுத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பல்வேறு கூட்டங்களில் குழப்பநிலையை ஏற்படுத்தி வருவதாகவும், அரச அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் தளமாக இருப்பதால், அவற்றை தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இடமாக பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இத்தகைய சம்பவங்கள் அதிகாரிகளின் பணியையும் மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளையும் பாதிக்கக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட தரப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில், எதிர்வரும் நாட்களில் மாவட்ட அபிவிருத்திக் குழு மீண்டும் கூடவுள்ளதாகவும், அப்போது தேவையான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிட்டார்.








