யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து 14 கிலோ 500 கிராம் கஞ்சா பொதிகளை சிறப்பு அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
நேற்று (16) இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, அப்பகுதி பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆழியவளை பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, கட்டிடத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 கிலோ 500 கிராம் எடையுடைய கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன.
மீட்கப்பட்ட கஞ்சா பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக அவை மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








