கண்டி, வத்தேகம – மடவளை பகுதியில் சுமார் 500 பவுண் தங்கம் மற்றும் பெருந்தொகையான பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் இருந்து கண்டிக்கு வந்த குறித்த குழுவினர், வத்தேகம பகுதியில் உள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று (22) பிற்பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 3 கிலோ 930 கிராம் எடையுடைய நான்கு தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்களிடமிருந்து ரூ.1 கோடியே 69 இலட்சம் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த தங்கம் மற்றும் பணம் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, கைப்பற்றப்பட்ட தங்கத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், தங்கம் மற்றும் பணத்துக்கான சட்டபூர்வ உரிமையை உறுதிப்படுத்தும் எந்தவித ஆவணங்களும் சந்தேகநபர்களிடம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தேகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








